தனக்கு அபார்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்த புரோக்கர் ஏமாற்றிவிட்டதாக கூறி அமைச்சர் தாமோ அன்பரசனிடம் புகார் மனு கொடுத்து தஞ்சம் அடைந்திருக்கிறார் நடிகர் சரவணன்.
அமைச்சர் தாமோ அன்பரசனை பொறுத்தவரை சிறுகுறு தொழில்துறை அமைச்சராகவும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் தலைவராகவும் உள்ளார்.இவரை நாடிச் சென்ற நடிகர் சரவணன், புரோக்கரால் தாம் ஏமாற்றப்பட்டதாக கூறி முறையிட்டிருக்கிறார்.

நடிகர் சரவணன் பருத்திவீரன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் லேக் வியூ அபார்ட்மெண்ட்ஸில் உள்ள 2 அபார்ட்மெண்ட்களை கடந்த 2014ஆம் ஆண்டு செண்பகராமன் என்பவரிடம் இருந்து ராமமூர்த்தி என்ற புரோக்கர் மூலம் விலைக்கு வாங்கியதாக கூறுகிறார் நடிகர் சரவணன். தனக்கு 2 மனைவிகள் என்றும் முதல் மனைவி லேக் வியூ அபார்ட்மெண்டில் குடியிருப்பதாகவும் சிறு கருத்து வேறுபாடு காரணமாக கொரோனா காலம் முதல் தாம் பெரும்பாலும் ஊரிலேயே இருந்து வந்ததாகவும் கூறுகிறார் சரவணன்.

அந்த தருணத்தில் தனக்குரிய கார் பார்க்கிங் உள்ளிட்ட தமக்கு சொந்தமான யூ.டி.எஸ். இடத்தையும் தனக்கு வீடு வாங்கிக் கொடுத்த ராமமூர்த்தி என்பவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அது குறித்து கேட்டால் ராமமூர்த்தியின் மனைவி தன்னை வெட்டிவிடுவோம், குத்திவிடுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதனால் தான் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் தலைவரும், சிறுகுறு தொழில்துறை அமைச்சருமான தாமோ அன்பரசனை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்திருப்பதாகவும் காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் தாம் முறையிட்டிருப்பதாக தெரிவித்தார்.
