கொடுக்கல் வாங்கல் தகராறில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது இளைஞர் ஒருவர் பரபரப்பு புகாரை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு விபிசி நகரைச் சேர்ந்தவர் கலைச் செல்வன் (29) கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தொழில் தொடங்க எண்ணினார்.இதற்காக மாதவரம் சாஸ்திரி நகரில் வசித்து வரும் பிரபல தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ 94 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார்.

அதில் ரூ 52 ஆயிரத்தை திரும்பக் கொடுத்துவிட்டு பாக்கி 42 ஆயிரம் ரூபாயைத் திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகரின் மனைவி நித்யாவுக்கும் கலைச் செல்வனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த இருவரும் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கலைச் செல்வன் வீடு திரும்பினார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாதவரம் போலீஸார் நேரில் சென்று இருவரிடம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து நித்யாவும் கலைச்செல்வனும் தனித்தனியே போலீஸில் புகார் அளித்தனர். அவர்கள் இருவரது புகாரையும் பெற்றுக் கொண்ட போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நித்யா தான் வசிக்கும் பகுதியில் எதிர்வீட்டில் ஒரு ஆசிரியரின் கார் கண்ணாடியை உடைத்தாக மாதவரம் போலீஸ் நிலையத்தில் புகார் எழுந்தது. நித்யாவும் தாடி பாலாஜியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலனளிக்கவில்லை இந்த நிலையில் நித்யாவிடம் இருக்கும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு தாடி பாலாஜி சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். நித்யா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
