சினிமா பைனான்சியர் அன்பு செழியனுக்கு நெருக்கமானவர் வீட்டிலிருந்து ரூபாய் 13 கோடி ரொக்க பணம் சிக்கி உள்ளது.
இன்று காலை முதலே தமிழ் திரை உலகில் முன்னணி தயாரிப்பாளர்கள் வீட்டிலும் அவர்களுக்கு சொந்தமானவர்கள் வீட்டிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர், குறிப்பாக பிரபல தயாரிப்பாளரும் வினியோகஸ்தரூமான கலைப்புலி தாணுவின் வீடு மற்றும் அலுவலகங்கள் அதே போல் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

அன்புச் செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு அலுவலகங்கள் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் அவரது குடும்ப உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அன்பு செழியனுக்கு நெருக்கமானவர் ஒருவரின் வீட்டிலிருந்து கட்டு கட்டாக 13 கோடி ரொக்க பணம் சாக்கு மூட்டைகள் கட்டி வைக்கப்பட்டது அம்பலமானது. இந்த பணம் கணக்கில் வரப்படாத பணம் என்றும் சினிமா தயாரிப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை இன்று மாலைக்குள் அவர்கள் சமர்ப்பிக்காவிட்டால் ஐடி அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி அரசிடம் ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை இரண்டு நாட்கள் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அன்புச் செழியன் பிகில் படம் விநியோகம் தொடர்பாக 2020 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தானு போன்ற மற்ற தயாரிப்பாளர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் இருந்தும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது. சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் கருப்பு பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
