தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது அவருக்கு புரிந்திருக்காது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் இந்திய மக்களிடம் குறைவாக இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் என்றாவது ஒருநாள் இந்தியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என பேசினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின் , ‛‛எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் மதுரையில் நேற்று இரவு யாத்திரையின்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “முக ஸ்டாலினுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார் என்றும் அவருக்கு புரியாது. கல்வியை தாய் மொழியில் வழங்க வேண்டும் என்றே அமித்ஷா தெரிவித்தார். திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்து வருகிறது.
முக ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மக்களிடம் பேச எந்த தகவலும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது தமிழின் பெருமையை பேசி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவரின் சிலையை வைக்க உள்ளார். எதிர்வரும் தேர்தலில் திமுக தோல்வி அடையும்.” என்றார்.
தமிழ்நாட்டை உங்களுக்கு பட்டா போட்டு கொடுத்திருக்கோமா ? அரசு விழாவில் இன்பநிதி ! கொந்தளித்த சீமான்