கும்பகோணம் மாநகராட்சியில் மேயராக உதயமாகி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன். கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் பொறுப்பை காங்கிரசிடம் ஒப்படைத்தது திமுக. இதனால் திமுகவினர் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்டோ ஓட்டுனரை மேயராக நிறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு மாநகராட்சிகள் கொண்ட மாவட்டம் தான் தஞ்சாவூர். இந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி தான் கும்பகோணம். முதல் முறையாக இங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் 48 வார்டுகள் அடங்கும் அதில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, இந்திய முஸ்லிம் லீக் 1, திமுக 38 வார்டுகள் என்று வெற்றியை சுவைத்தனர். சுயேட்சை மற்றும் அதிமுகவினர் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பொறுப்பை தட்டி தூக்குவதற்காக திமுகவினர் கடுமையாக முயற்சி செய்து வந்தனர். ஆனால் திமுக தலைமை கும்பகோணம் மாநகராட்சிக்கு மேயர் பதவியை கூட்டணி கட்சியில் அங்கம் வகித்த காங்கிரஸ்க்கு தாரை வார்த்துக் கொடுத்தது இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு மேயர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வாய்ப்பை கொடுத்ததால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். கும்பகோணம் நகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகளை பிரித்து கொடுத்தது. அதில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. இதில் 18வது வார்டில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ஆட்டோ ஓட்டுநர் சரவணனை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
கும்பகோணத்தின் முதல் மேயராக திமுகவினர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எண்ணி காத்திருந்த திமுகவினருக்கு இது பெரும் அதிர்ச்சி என்றே சொல்லலாம்.