சென்னை கூடுவாஞ்சேரி அருகே இன்று அதிகாலை 3.30 மணியளவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ரவுடிகளுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். 2 ரவுடிகளின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை – புதுச்சேரி செல்லும் சாலையில் இன்று அதிகாலையில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த கருப்பு நிற ஸ்கோடா கார் ஒன்றை போலீசார் நிறுத்த முயன்றனர்.

ஆனால், அந்த காரில் இருந்தவர்கள் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து, போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது. அந்த காரில் இருந்து அடையாளம் தெரியாத 4 பேர் ஆயுதங்களுடன் இறங்கி வந்து போலீசாரை நோக்கி தாக்க முயன்றனர். அப்போது உதவி ஆய்வாளர் சிவகுருநாதனுக்கு இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. மீண்டும் ரவுடிகள் அவரை தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சுதாரித்து தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியை கையில் எடுத்துள்ளனர். காவல் ஆய்வாளர் முருகேசன் ஒரு நபரையும், உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மற்ற இருவரும் அங்கிருந்து ஆயுதங்களுடன் தப்பி ஓடினர். துப்பாக்கியால் சுடப்பட்ட 2 பேரையும் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் 2 பேரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். விசாரணையில், என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவரும் தான் என்பது தெரியவந்தது.

இதில் உயிரிழந்த வினோத் (எ) சோட்டா வினோத் (35) ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும், அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ் (32) ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, HS.No.18/20) குற்றவாளி எனவும், அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

தப்பி ஓடிய மற்ற இரண்டு ரவுடிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலையில் கூடுவாஞ்சேரி பகுதியில் காவல் ஆய்வாளரை தாக்கிய இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
