சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக நடித்த பிரபல நடிகர் பூ ராம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இவரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் திரை பிரபலங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் வேண்டி வருகின்றனர். பிரபல நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியுள்ளார் “விரைந்து நலம் பெற்றுவா தோழா! வீதி நாடகக் கலைஞர் திரைப்பட நடிகர் தோழர் ‘பூ’ ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கிரிடிகல் நிலையில் சென்னை இராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் Tower 1 ல் முதல் மாடி ICU Ward 111ல் Bed 15ல் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று அவருக்கு ஆறுதல் கூறி ஒரு ட்வீட் செய்திருக்கிறார்.

இவர் பூ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, அதற்காக அதன் பின்னர் இவரின் பெயருக்கு முன்னே பூ என்ற எழுத்தை சேர்த்து பூ ராம் என்று அழைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்பறவை படத்தில் விஷ்ணுவுக்கு தந்தையாக நடித்து அசத்தி இருந்தார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு காலேஜ் புரபசர் ஆக வரும் ஒரு காட்சியில் ஒரு டயலாக் பேசி மிகவும் பிரபலம் அடைந்தார்.
மேலும் அந்த டயலாக் சமூக வலைதளங்களில் அப்போது மிகவும் வைரலானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அவருக்கு தந்தையாக நடித்து ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய படங்களில் நடித்து பெயர் வாங்கிய நாடகக் கலைஞரான இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்து இருக்கிறார். அதனால் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் இவரின் உடல் நலம் பெற்று பழையபடி வரவேண்டுமென திரைப்பிரபலங்கள் வேண்டி வருகின்றனர்.
