பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் மற்றும் நடிகை திரிஷா ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை நாடு முழுவதும் வெளியாகிறது.
இந்தப் படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமாக இயங்கக்கூடிய 2405 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது லைக்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் அது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். இது திரைக் கலைஞர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும் அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
