அன்பே சிவம், பகவதி, புதுப்பேட்டை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த முரளிதரன் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரரான இவர், வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். குறிப்பாக, ‘அன்பே சிவம்’, ‘வீரம் வெளஞ்ச மண்ணு’, ‘மிஸ்டர்.மெட்ராஸ்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘அரண்மனை காவலன்’, ‘வேலுச்சாமி’, ‘ப்ரியமுடன்’, ‘பகவதி’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘உன்னை நினைத்து’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். பல படங்களை விநியோகமும் செய்திருக்கும் இவர் இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் ‘சகலகலா வல்லவன்’ படத்தை தயாரித்திருந்தார்.

அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்தார் முரளிதரன். இந்நிலையில், கும்பகோணத்தில் வசித்து வந்தவர், மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மறைந்த கே.முரளிதரன் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.